தெற்கு அரசியலில் கட்சி தாவும் படலம்: SJP எம்.பிக்கள் நாமல் பக்கம் தாவல்?
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும், முக்கிய தருணத்தில் அவர்கள் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களில் ஓரிருவரைத் தவிர, ஏனையோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். எனினும், தேவையற்றவர்கள் மற்றும் பிரச்சினைக்குரியவர்கள் எனக் கருதப்படுபவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளவே மாட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் சிலர் ஏற்கனவே எம்முடன் இணைந்துள்ளனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்கள் தற்போது எம்முடன் இணைந்தால் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.
அவர்கள் எம்முடன் இணைவதற்கு நாம் விருப்பம் தெரிவித்துள்ளோம். எனவே, பிரதான தேர்தலொன்று வரும்போது அவர்கள் தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்” என்று சாகர காரியவசம் தெரிவித்தார்.




