திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறப்பு
திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யூ.மஹிந்த திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யுத்த காலத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீபுர கூட்டுறவு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த குறித்த பொலிஸ் நிலையம் ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
30 இலட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் 10 மாதத்திற்குள் ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த ஜே. எம் ஏ. டி பண்டார ஜெயதிலக்க தனது எல்லைக்குட்பட்ட ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காணப்பட்ட வளங்களை பயன்படுத்தி சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உதவியுடன் குறித்து கட்டிடத்தினை ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளார்.
இதேவேளை போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதிலும், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு அளிப்பதிலும் சிறந்து சேவையாற்றிய குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நிக்கவரட்டிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







