செம்மணி புதைகுழி: அகழ்வுப் பணி நாளையுடன் நிறுத்தம்: அடுத்து என்ன?
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து அதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தற்போது இடம்பெற்றுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள், இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் சாட்சியங்களைப் பெறல் என்பன பற்றி ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
” செம்மணி மனிதப்புதைகுழியில் தற்போதுவரை 560 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருப்பதுடன், ஓகஸ்ட் 19 ஆம் திகதி புதன்கிழமை நாளை வரை அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை இதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.





