புலம் பெயர் தொழிலாளர்கள் பணியின்போது மரணமடைந்தால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகரிப்பு
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இறப்பு இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதின் அறிவுறுத்தலின் பேரில், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் மேற்பார்வையின் கீழ் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி, தற்போதைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் 600,000 ரூபா இறப்பு இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக, SLBFE-இன் புலம்பெயர் தொழிலாளர் நல நிதியத்தின் (Workers’ Welfare Fund) ஊடாக மேலும் 1.4 மில்லியன் ரூபா வழங்கப்படும் என்று SLBFE தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழான முதலாவது இழப்பீட்டுத் தொகைகள் 2026 செப்டம்பர் 10 அன்று SLBFE-இன் கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வின் போது, உயிரிழந்த 50 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் பயனாளிகளுக்கு மொத்தம் 70 மில்லியன் ரூபா மேலதிக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.




