எல் நினோ தாக்குதல்:வறட்சியின் பிடிக்குள் இந்தியா
தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலையால் இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வறட்சியான பருவமழையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இது பயிர் விளைச்சலைப் பாதிப்பதோடு உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் இதுவரை பதிவான சராசரி மழைப்பொழிவு, வழக்கமான அளவை விட 15% குறைவாக உள்ளது.
இந்த பற்றாக்குறை தொடர்ந்தால், இயல்பை விட 18% மழைக்குறைவு பதிவான 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும் மிக மோசமான பருவமழையாக இது அமையும்.
வானிலை ஆய்வு மையம் கடந்த மே மாதமே இப்பட்ட பருவமழைக் காலத்தில் 10% மழைக்குறைவு இருக்கும் எனக் கணித்திருந்தது.
செப்டம்பர் கடைசி வாரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக சாதகமான சூழல் நிலவுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘க்ளோபல் வெதர் கிளைமேட் அனலிடிக்ஸ்’ ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டியன் வெர்னர் தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தேவையான மழையைக் கொண்டுவந்து, அங்குள்ள பற்றாக்குறையைக் குறைக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த புயல் நாட்டின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறைச் சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், பருவமழை பற்றாக்குறை 13% முதல் 16% வரை இருக்கும் என்றும் வெர்னர் எதிர்பார்க்கிறார்.
அரிசி, சர்க்கரை மற்றும் பருத்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான இந்தியாவில், விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய இந்த பருவமழையையே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்குப் போதிய மழைப்பொழிவு மிக அவசியமானதாகும். இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவில் பெரும்பாலான பங்கை இந்த பருவமழையே வழங்குகிறது.
நீடிக்கும் இந்த மழைப் பற்றாக்குறை தற்போதைய அறுவடையையும், அடுத்த பயிர்ச் சுழற்சியையும் பாதிக்கக்கூடும்.
மழைக்குறைவு மற்றும் விலை உயர்வின் காரணமாக, சர்க்கரை இருப்பைப் பலப்படுத்த வரிவிலக்குடன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
மேலும், உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சில மாநிலங்களில் மானிய விலையில் வெங்காயத்தையும் அரசாங்கம் விற்பனை செய்து வருகிறது.




