வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பெருங்கடல்களின் வெப்பநிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ‘கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை’ (Copernicus) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, துருவப் பகுதிகளைத் தவிர்த்து பூமியின் பிற கடல்களின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கடந்த சனிக்கிழமை 21.1 டிகிரி செல்சியஸை (70F) எட்டியுள்ளது.
இது இதற்கு முன்னர் 2024 மார்ச் மாதத்தில் மூன்று வெவ்வேறு நாட்களில் பதிவான 21.09 டிகிரி செல்சியஸ் என்ற சாதனையை முறியடித்துள்ளதோடு, ஆண்டின் இக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையை விட மிக அதிகமாகும்.
பெருங்கடல்களின் வெப்பநிலை உயர்வது தீவிர வானிலை மாற்றங்களை உருவாக்குவது, கடல் நீர்மட்டத்தை உயர்த்துவது மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிப்பது எனப் பல கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
இது குறித்து கருத்து வெளியிட்ட கோப்பர்நிகஸ் அமைப்பின் துணைப் பணிப்பாளர் டாக்டர் சமந்தா பர்கெஸ்,
“இந்த சாதனைப் பதிவு, பெருங்கடல்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை உணர்த்தும் மற்றொரு தெளிவான அறிகுறியாகும்.
எல் நினோ நிகழ்வு வெப்பத்தை மேலும் அதிகரிக்கிறது, ஆனால் இது தசாப்தங்களாக மனிதனால் ஏற்படுத்தப்பட்ட புவி வெப்பமயமாதலின் மீதே கூடுதல் சுமையாக அமைகிறது” என்றார்.
மிதவைகள் (buoys), கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளை ஒருங்கிணைத்து, கடலின் மேற்பரப்பில் இருந்து 10 மீட்டர் (32 அடி) ஆழத்திலான வெப்பநிலை கணக்கிடப்பட்டு இந்த உலகளாவிய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வானது கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பிற்கு வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பமண்டல நீரைக் கொண்டுவருகிறது. இவ்வளவு பெரிய பரப்பளவில் நீர் வெப்பமடைவதால், உலகளாவிய சராசரி வெப்பநிலையும் வழக்கமாக கணிசமாக அதிகரிக்கும்.
எதிர்வரும் கிறிஸ்துமஸ் காலம் வரை எல் நினோ தொடர்ந்து தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலிமையான எல் நினோவாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகக் கடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.




