கொங்கோ, உகாண்டாவில் எபோலா பாதிப்பு 600 ஆக உயர்வு
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் சந்தேகிக்கப்படும் எபோலா (Ebola) நோயாளர்களின் எண்ணிக்கை
600 ஆக அதிகரித்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அத்துடன் 139 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் தற்போதும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக உள்ளதென
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரகாலக் குழு கூட்டத்தில், அதன் தலைமை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
ஆனால், இது உலகளாவிய பெருந்தொற்று அவசரநிலையாக தற்போது கருதப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தேசிய மற்றும் பிராந்திய அளவில் அபாயம் அதிகமாக இருந்தாலும், உலகளவில் அபாயம் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார
அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
முன்னதாக காங்கோ அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, 513 சந்தேக நோயாளிகளில் சுமார் 131 பேர் உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருந்தது. கடந்த நோய்ப்பரவல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகே இந்த புதிய பரவல் ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவுத் தலைவர் சிக்வே இஹெக்வேசு, “தற்போதுள்ள அனைத்து நோய்ப்பரவல் சங்கிலிகளையும் கண்டறிவதே எங்கள் முன்னுரிமை” என்று தெரிவித்தார். இதன் மூலம் நோய்ப்பரவலின் உண்மையான அளவை கண்டறிந்து சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த நோய்ப்பரவல், தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லாத புண்டிபுக்யோ வகை எபோலா வைரஸால் தீவிரமடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



