மேற்காசிய போர்: இந்தியாவில் 3 நாள் விசேட மாநாடு!
இந்திய தூதரக தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் எதிர்வரும ஏப்ரல் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
உலக நாடுகளில் இந்திய தூதுவர்களாக சேவையாற்றுபவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
மாநாட்டின் முதல் நாள், வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவும் ஈரானும் முற்றுகையிட்டு உள்ளதால் ஏற்படும் கடுமையான பொருளாதார பின்விளைவுகள் ஆகியவை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்கவுள்ளார்.
இரண்டாம் நாள் மாநாட்டில், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார்.
மேற்காசிய போர், உக்ரைன் போர், வளர்ந்து வரும் சீன ஆதிக்கம், புதிய உலகளாவிய சமநிலை ஆகியவை குறித்து இந்திய தூதர்களுக்கு ஜெய்சங்கர் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.
அவரைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
அவர், இந்திய ராணுவத்தின் திறன் மற்றும் ராணுவ கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து தூதரக தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உரை நிகழ்த்த உள்ளார்.
மாநாட்டின் மூன்றாம் நாளான ஏப்ரல் 30ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
வெளியுறவுத் துறையில் இந்தியாவின் தொலைநோக்குத் திட்டம் குறித்தும், மேற்காசிய போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.





