சிறைச்சாலை கலவரம் தொடர்பில் புலனாய்வு தகவல் முன்கூட்டியே கிடைத்ததா?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தவித உளவுத் தகவல்களும் கிடைக்கபெறவில்லை என பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்களை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், சிறைச்சாலைகளுக்கு புலனாய்வு பிரிவினரிடமிருந்து இவ்வாறான உளவுத் தகவல்களை கிடைப்பது வழமை எனவும், எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித முன்னறிவிப்புகளோ உளவு தகவல்களோ கிடைக்கவில்லை என தம்மால் உறுதியாக கூறமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கைதிகள் முதலில் சிறைக்குள் இருந்த இரும்புப் பாதுகாப்புக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, அதற்கு அப்பால் இருந்த மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
இரும்புக் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்த பிறகு, கைதிகள் அருகிலிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கும் பாதுகாப்புப் படையினரால் எடுக்க முடிந்த ஒரே நடவடிக்கை துப்பாக்கிச் சூடு நடத்துவதுதான் என்றும் அவர் விளக்கினார்.
“சிறைச்சாலையில் இரண்டு பிரதான கதவுகள் உள்ளன. ஒரு இரும்புக் கதவும், அதைத் தொடர்ந்து ஒரு மரக் கதவும் உள்ளன. கைதிகள் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு மரக் கதவை அடைந்தனர். இந்த இரண்டு கதவுகளுக்கும் இடையில் மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. அவர்கள் மரக் கதவையும் உடைத்திருந்தால், ஏற்பட்டிருக்கக்கூடிய சேதத்தின் அளவைக் கணிப்பது கடினம்” எனவும் தெரிவித்துள்ளார்.
கலவரத்தின் போது பல சிறை அதிகாரிகள் வளாகத்திற்குள் சிக்கிக்கொண்டு, கைதிகளால் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.




