அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் இருவர் தவெகவுடன் சங்கமம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர், தகெவில் நாளை (02) சங்கமிக்கவுள்ளனர்.
இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தத் தோல்வி அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உட்கட்சிப் பூசலும் வெடித்தது.
பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து தனி அணியாக உருவெடுத்தனர்.
இதற்கிடையே, அதிருப்தி அணியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மற்றொரு முக்கிய திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை (ஜூலை 2) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவுள்ளனர்.
இவர்களுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




