இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: முற்றுகைப் போராட்டத்தால் திருமலையில் பதற்றம்
திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது.
இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்திற்கு காரணமான அலட்சியப் போக்கைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று (26-06-2026), இந்த நிலையத்தின் மூலம் ஆழ்கடல் நீச்சலுக்கு (Diving) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
இதன்போது அவருக்கு ஏற்பட்ட அவசர நிலையின் போது, முறையான முதலுதவிகளோ அல்லது அவசரப் பராமரிப்புகளோ வழங்கப்படாமல் அந்நிலையம் முற்றிலும் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இந்தியப் பயணி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ நிர்வாகம் எவ்விதப் பொறுப்புணர்ச்சியுமின்றி, மற்றுமொரு குழுவினரை டைவிங் செய்ய அழைத்துவந்து, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையிலும், நிலையத்தின் இந்த மனிதநேயமற்ற, தொடர் அலட்சியப் போக்கைக் கண்டு கொதித்தெழுந்த திருகோணமலை மாவட்ட சுற்றுலா சார்ந்த பொது மக்களும், திருகோணமலை சுற்றுலா மகா சங்கத்தின் உறுப்பினர்களும் இணைந்து இந்த முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்
முற்றுகை காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அத்துடன், மறு அறிவித்தல் வரும் வரை ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ தனது சேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு தடை உத்தரவைப் பிறப்பித்தார்.






