சமாதான பாதயாத்திரையில் பச்சிளம் குழந்தையை ஆசீர்வதித்த தேரர்: நெகிழ்ச்சிச் சம்பவம்
இலங்கையில் தற்போது, உலக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச ‘அமைதிக்கான பாதயாத்திரை’ நிகழ்ச்சியின் இன்றைய பயணத்தின் போது, காண்போரை நெகிழ வைக்கும் மனிதாபிமானச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், இன்று (23) வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அலுவிஹாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை நோக்கித் தமது பாதயாத்திரை ஊர்வலத்தை ஆரம்பித்தனர்.

வெயிலையும் பொருட்படுத்தாது பக்திப் பெருக்குடன் மக்கள் வீதியோரங்களில் திரண்டிருக்க, பௌத்த பாராயண பாடல்களை இசைத்தபடி இந்த ஆன்மீகப் பயணம் நகர்ந்து கொண்டிருந்தது.
இதன்போது, பாதையோரத்தில் ஒரு தம்பதியினர் தமது மாதக்கணக்கே ஆன பச்சிளம் குழந்தையை துணியொன்றில் கிடத்தி வைத்திருந்தனர்.
உலகை அறியாத அந்த மழலைக்கு, இப்புனிதப் பயணத்தில் வரும் சாதுக்களின் அருளாசி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்தப் பெற்றோர் அங்கு காத்திருந்தனர்.

யாத்திரையை முன்னின்று வழிநடத்தி வந்த வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர், மக்கள் கூட்டத்தைக் கடந்து சென்ற வேளையில், வீதியோரம் கிடத்தப்பட்டிருந்த அந்தச் சிறு ஜீவனைக் கண்டதும் உடனடியாகத் தனது நடையை நிறுத்தி அங்கு சென்று அவருக்கு ஆசி வழங்கியுள்ளார்.
இது குறித்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.





