30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உயிர்நீத்த தெருநாய்!
தெரு நாயொன்று விஷப் பாம்பிடம் இருந்து 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலம் – தீர்குலா கிராமத்தில் அமைந்துள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு மிகக் கொடிய விஷப்பாம்பு ஒன்று வந்துள்ளது.
குழந்தைகள் விளையாடும் இடத்தை நோக்கி பாம்பு செல்வதைக் கண்ட தெருநாய் ஒன்று உடனடியாக பாம்பைத் தடுத்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் பார்த்ததாக கூறியுள்ளனர்.

பாம்பும் நாயும் சண்டையிட்டதில், நாயின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாம்பு கடித்துள்ளது.
எனினும், பாம்பைக் கொல்லும் வரை அந்த நாயும் அமைதி அடையவில்லை.
இறுதியில் பாம்பைக் கொன்று விட்டு சில நொடிகளில், நாயும் இறந்து போயுள்ளது.
30 குழந்தைகளைக் காப்பாற்றிய அந்த நாய்க்கு நன்றி செலுத்தும் வகையில்இ தீர்குலா கிராம மக்கள் அதற்கு முறையாக இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.
இந்த விடயம் சமூக ஊடகங்களில் வைரலாக, குறித்த நாயின் செயலானது ஐந்தறிவு உயிர்களின் நன்றி உணர்வையும், மனிதர்களிடம் அவை கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்து விட்டது என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.





