பலமடைந்துள்ள இந்திய ராணுவ வலிமை!
“ இந்தியாவின் ராணுவ வலிமை முன்னெப்போதையும் விட பன் மடங்கு வலுப்பெற்றுள்ளது.” – என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார்.
ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவம் என்ன சாதித்துள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நமது ராணுவ வலிமை வலுப்பெற்றுள்ளது.
இந்தியா உலகிலுள்ள எந்த நாட்டையும் தாமாக முன்வந்து தாக்கியதே இல்லை. ஆனால், அண்டை நாடு ஏதேனும் ஒன்று வம்பு செய்ய முயன்றால், அதன் பிறகு விளைவு கடுமையாக இருக்கும்.
மற்ற அண்டை நாடுகள் நமது நாட்டுடன் நட்புடன் உள்ளன. நமக்கு ஒரே ஒரு அண்டை நாடு மட்டுமே தொல்லை கொடுத்து வருகிறது.” எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
தொல்லை கொடுத்து வரும் அண்டை நாடு பாகிஸ்தான் என்பதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகமாக இங்கு குறிப்பிட்டார்.




