வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரம் மாகாணசபை தேர்தலை நடத்த திட்டம்?
அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அந்த பிராந்தியங்களுக்கு மாத்திரம் நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் தனி காணி மற்றும் பொலிஸ் அதிகார சட்டங்களை உருவாக்க அராங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசியலமைப்பின் படி பாராளுமன்றச் சட்டத்துக்கு எதிராக எவராலும் நீதிமன்றம் செல்ல முடிந்தாலும், மாகாண சபைச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது என்ற சட்டச் சிக்கல் காணப்படுகின்றது. இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே அரசாங்கம் முற்படுகின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனூடாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குள் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாகவும், பெரும்பான்மையினரின் வாக்குகளில் 10% அல்லது 15% வாக்குகளையும் பெற்று, மலையக வாக்குகளையும் பெற்று ஜனாதிபதியாகத் தொடர வேண்டும் என்பதே இவர்களின் இலக்காக காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ஜனநாயகத்தையும் சமூக ஒழுக்கங்களையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு எந்தவொரு கீழ்த்தரமான வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசாங்கத்தின் இந்த ஆபத்தான அரசியல் ஆட்டத்தை அப்படியே வேடிக்கை பார்க்க முடியாது எனவும் அதனை முறியடிக்க இந்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரளத் தயாராக இருக்கின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




