தெலுங்கானா முதல்வருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு
தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது லண்டனில் உள்ள ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி அவர் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது.
இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால், அவர் ஆகஸ்ட் 23-ஆம் திகதியே லண்டனில் இருந்து ஹைதராபாத் திரும்பவுள்ளதாகத் தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
” முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அதிகாரப்பூர்வக் குழு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்காக மாநில அரசு சார்பில் , மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், பிரித்தானியா பயணத்திற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்தது.
முதலமைச்சர் தலைமையிலான குழு பிரித்தானியா சென்ற அடைந்த பிறகே, அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே இந்த அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்கும், குறிப்பாகத் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்திற்கும் கொண்டு வருவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து சிறப்பான கல்வியையும் பயிற்சியையும் பெற வேண்டும் என்ற நமது இளைஞர்களின் கனவுகளுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருக்கும்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயங்களில், அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு நாம் சிந்திக்க வேண்டும்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




