இலங்கை செய்தி

வடக்கில் திணைக்களங்களை கண்காணிப்பதற்கு விசேட குழு!

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், நேற்றுப் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு:-

மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும், அரச சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுமே இக்குழு உருவாக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

ஆளுநர் செயலகத்துக்குத் தினமும் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

இவை குறித்து அந்தந்தத் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தினாலும், உரிய காலப்பகுதிக்குள் தீர்வுகள் எட்டப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஆட்சியில் அமர்த்தியதன் பிரதான நோக்கம் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதாகும்.

எனவே, இந்தக் குழு முன்னெடுக்கும் கள ஆய்வுகள் மற்றும் விசாரணைகளில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இருக்காது. நீங்கள் முழுமையான சுயாதீனத்துடன் செயற்பட முடியும்.

மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதி வினைத்திறனான முறையில் செலவிடப்படுகின்றதா என்பதை இக்குழு தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.

அத்துடன், அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாமை மற்றும் சேவைகளை வழங்கத் திட்டமிட்டு இழுத்தடித்தல் போன்ற பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விசாரணைகளை முன்னெடுக்கும்போது தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும், கடந்த காலங்களில் நிலவிய விசாரணைக் குறைபாடுகளை எவ்விதம் நிவர்த்தி செய்வது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் விசேட குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!