கிழக்கில் காணி பாதுகாப்புக்கு விசேட குழு நியமனம்!
கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையைப் பாதுகாப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, அந்தக் கடற்கரையைப் பாதுகாத்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முறையான திட்டமொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடல் தடுப்புச்சுவர் அமைப்பது கடலரிப்பைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு அல்ல என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
ஒலுவில் துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்பிடித் துறைமுகம் குறித்தும் கவனம் செலுத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கக்கூடிய விஞ்ஞான பூர்வமான முறைமை ஒன்றைப் பற்றி விரைவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்பல்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, இனிவரும் காலங்களில் அதற்கு இடமளிக்க வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இங்கு கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தி, அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.






