”பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி” : 60 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பாணை
பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி குறித்து கலந்துரையாட 60 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அழைப்புப் பட்டியலில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி தொடர்பிலும், உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்ட அமலாக்கம் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் ( Tommy Pigott), தீவிர இடதுசாரி பயங்கரவாதம் என்பது “வலுவான நாடுகடந்த தொடர்புகள் மற்றும் புதிய ஒருங்கிணைப்புகளுடன் மீண்டும் தலைதூக்கும் ஒரு பழைய அச்சுறுத்தல்” என்பதால் இந்தக் கூட்டம் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.




