இலங்கை செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப் படையினரால் மாலைதீவு ஜனாதிபதிக்கு இதன்போது விசேட மரியாதை வழங்கப்பட்டதுடன், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர், சிறுமியர் இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்று மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றனர்.

மாலைதீவு – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பகுதியில் உள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.

ஜனாதிபதி முகமது முய்சு, 2023 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

மேலும், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர், கொழும்பில் நடைபெறவுள்ள விசேட வர்த்தக சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி முய்சுவுடன் அவரது பாரியார் சாஜிதா முகமது மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
2026-05-03

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!