பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தின்போது பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.







