ஆப்கானிஸ்தானில் கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் கவிழ்ந்து இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 10 குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக நங்கர்ஹாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் உயிரிழப்பை ஏற்படுத்தும் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. பல தசாப்த கால மோதல்களுக்குப் பிறகு மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல் இந்த விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது.




