மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு NPP அரசுக்கு வலுக்கிறது அழுத்தம்!

“வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல முழு நாட்டுக்கும் மாகாணசபை முறைமை அவசியம். எனவே, மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பது தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேர்தலை எதிர்கொள்ள முழு நாடும் தயார். ஆனால் தெரிவுக்குழு அமைத்து, திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் இழுத்தடிக்கப்படுகின்றது.
தமக்கு மக்கள் ஆணை உள்ளது, பல வருடங்களுக்கு இந்த அரசை அசைக்க முடியாது என நம்பும் என்பிபியினர் முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தட்டும். எமது சவாலை அரசாங்கம் ஏற்கவேண்டும்.
வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல முழு நாட்டுக்கும் மாகாணசபை முறைமை அவசியம். அதனை விரைவில் நடத்த வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நாம் எமது வேட்பாளர்களை பெயரிடுவோம்.” – என்றார் அஜித் பி பெரேரா.







