லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை
சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
“லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து மீட்சிக்குத் தனது நாடு நகரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.




