பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கை மத்திய வங்கியின் “வருடாந்த பொருளாதார ஆய்வு 2025′ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025’” ஆகிய இரண்டு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) கையளிக்கப்பட்டன.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால் இந்த இரு அறிக்கைகளும் இவ்வாறு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அதன் முக்கிய வெளியீடான ‘2025 வருடாந்த பொருளாதார ஆய்வு’ அறிக்கை ஊடாக “ பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுதல், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கை ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளின் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் பெற்ற முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் வெற்றியடைந்துள்ளது.
மேலும், வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் போக்குகள் சார்ந்த உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட மோசமான காலநிலை மற்றும் அனர்த்தங்களின் தாக்கங்களுக்கு மத்தியிலும், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் தாங்கும் திறன் காணப்பட்டுள்ளது.
பேரண்டப் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சி மற்றும் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மை மேம்பட்டதுடன், அதன் ஊடாக வலுப்பெற்ற முதலீட்டு நம்பிக்கை மூலம் அதிர்ச்சிகளை மிகவும் செயற்திறனான முறையில் எதிர்கொள்வதற்குத் தேவையான சுய பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரத் திறனை மேம்படுத்தி நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, உட்பட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





