யாழ். கலாசார மையம் குறித்து மாநகரசபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!
யாழ்ப்பாணம் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முழுமையான பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் வி.மதிவதனி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் கலாசார மையத்தின் தற்போதைய பராமரிப்பு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விவாதங்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
மாநகர சபையால் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக, நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் விரைவாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தக் கலாசார மையத்தை நிர்வகிப்பதற்காக எந்தவொரு தனியான நம்பிக்கைப் பொறுப்புக் கட்டமைப்பும் உருவாக்கப்படுவதற்கோ அல்லது அதன் கீழ் நிர்வாகம் கொண்டு செல்லப்படுவதற்கோ இந்தச் சபை எவ்விதத்திலும் உடன்படப் போவதில்லை.
எனவே, இருதரப்பு உடன்படிக்கையின்படி இந்தக் கட்டடத்தை மாநகர சபையிடம் நேரடியாகக் கையளிக்குமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரையும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரையும் கோருவதென யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.” – என்றுள்ளது.




