பாலஸ்தீன அகதி முகாம்களுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் படைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) துபாஸ் , அக்காபா மற்றும் பாரா ஆகிய நகரங்களில் உள்ள அகதி முகாம்களுக்குள் இஸ்ரேலியப் படைகள் அத்துமீறி நுழைந்து, சோதனை நடத்தியுள்ளன.
இந்த மூன்று பகுதிகளிலும் உள்ள பல பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர், பின்னர் அங்கிருந்து பின்வாங்கினர்.
இச்சோதனைகளின் போது எவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தினமும் வீடுகளில் சோதனை நடத்துவது, பாலஸ்தீனியர்களைக் கைது செய்வது மற்றும் சாலைகளை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவது தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளன.
இவற்றுடன், பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் (Settlers) நடத்தும் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





