சர்வதேச தேயிலை தினம்: “Ceylon Tea”க்கு புத்துயிர் கொடுக்கிறது இலங்கை!
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மே 21 ஆம் திகதி இலங்கையில் தேயிலை நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல Ceylon Tea நாமத்தை மேலோங்க வைக்கும் வகையில் காலி முகத்திடலில் அன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்றது.
இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் மேற்படி தகவலை வெளியிட்டனர்.
இது தொடர்பில் அவர்கள் கூறியவை வருமாறு ,
“ஸ்ரீலங்கா என்ற நாமம் உலகலாவிய ரீதியில் தெரியவருவதற்கு தேயிலையே பிரதான காரணமாக அமைந்தது. சிலோன் டீ என்றாலே உலகளவில் அதிகளவான மக்கள் விரும்பி அருந்தும் தேநீராகும்.
சர்வதேச தேயிலை தினம் எதிர்வரும் 21 ஆம் திகதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. இலங்கையிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய மே 21 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தேயிலை சபைக்கு அருகில் இருந்து நடை பவனி ஆரம்பமாகும். காலி முகத்திடல்வரை அந்த நடை பவனி இடம்பெறும்.
தேயிலைத் தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டே இதற்குரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதகரங்கள் ஊடாக 30 இற்கு மேற்பட்ட நாடுகளில் இலங்கை தேயிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
2027 ஆம் ஆண்டாகும்போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ – என்றனர்.




