இந்தியா – சீனா எல்லைப் பேச்சு : பீஜிங் சென்றடைந்தார் அஜித் தோவல்!
இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார்.
சீன வெளியுறவு அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினருமான வாங் யீயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள எல்லைப் பிரச்சினைக்கான 25ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், இந்தியச் சிறப்புப் பிரதிநிதியான அஜித் தோவலும், சீனச் சிறப்புப் பிரதிநிதியான வாங் யீயும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தனது இரு நாள் பயணத்தின் போது, அஜித் தோவல் சீனத் துணை அதிபர் ஹான் செங்கையும் (Han Zheng) நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இந்தத் தொடர் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைச் சீரமைப்பதில் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.




