ஈரான் தாக்குதலால் பெரும் சேதம்: அமெரிக்க எடுக்கும் மிக முக்கிய தீர்மானம்
ஈரானுடனான போரில் பெரும் சேதமடைந்த மத்திய கிழக்கிலுள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேலுக்கு இடமாற்றம் செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய ஆளில்லா விமானங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளான மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், எதிர்பார்த்ததை விட அதிக சேதத்தைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, மத்திய கிழக்கில் நடந்த போரில் 20க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களும் தூதரகங்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தனது ஒட்டுமொத்த படை நிலைநிறுத்தல் உத்தியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது.
ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல்களின் வரம்பிலிருந்து தொலைவில் உள்ள இஸ்ரேல் போன்ற மேற்குப் பகுதிகளுக்குத் தளங்களை மாற்றுவதே இதன் நோக்கமாகும் .
பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட சேதம், முன்பு நினைத்ததை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக்கோள் படங்கள், பல்வேறு காணொளிகள் மற்றும் தற்போதைய, முன்னாள் இராணுவத்தினரின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. சில தளங்கள் மிகவும் சேதமடைந்துள்ளதால், அவை இனி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இந்தத் தளங்களை மீண்டும் கட்டியமைக்க குறைந்தபட்சம் 400 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பதவிக்காலத்தில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை, ஈரானிய ஆளில்லா விமானங்களின் தாக்குதல் வரம்பிற்கு அப்பாற்பட்ட மேற்குப் பகுதிகளுக்கு மாற்றுவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ஆனால், அந்தத் திட்டங்கள் அப்போது செயல்வடிவம் பெறவில்லை.
இதற்கிடையில், ஈரானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளைக் கண்காணிப்பதில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாகவும், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டிற்காக உள்ளூர் மோதல்கள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் மீதான தாக்குதல், அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
தனது நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றாத கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று ஈரான் முன்னதாகக் கூறியிருந்தது.
இருப்பினும், இந்த விதியை மீறி புதிய பாதைகளில் சென்ற ஒரு கப்பல் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




