மந்தநிலையை நோக்கி நகரும் உலக பொருளாதாரம் – IMF கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால் உலக பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF), எச்சரித்துள்ளது.
அமைப்பின் உலக பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில், எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சி 02 சதவீதத்துக்கும் கீழ் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 1980 க்குப் பிறகு மிக கடுமையான உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு நெருக்கமான நிலை எனவும் IMF குறிப்பிட்டுள்ளது.
முக்கிய எண்ணெய் வழியான ஹார்முஸ் நீரிணை பாதிப்பு மற்றும் மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக,
உலக சந்தையில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடுமையான சூழ்நிலையில் கச்சா எண்ணெய் பீப்பாயொன்றுக்கு 110 முதல் 125 டொலர் வரை உயரக்கூடும் என்றும், இதனால் பணவீக்கம் 6 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் IMF எச்சரித்துள்ளது.
இதனால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மோதல் விரைவில் நிறைவடைந்தால், 2026ஆம் ஆண்டில் உலக வளர்ச்சி சுமார் 3.1 சதவீதமாக இருக்கலாம் என்றும்
IMF தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.





