ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – அர்ச்சுனா
தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் கூறிய அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு மக்களுக்கும்,
தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
“தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால் பதிக்கும் போதுதான், இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை. முன்னர் நான் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குமாறு கூறினேன். ஆனால் இப்போது, ஒட்டுமொத்த இலங்கையையுமே தமிழகத்திற்கு கொடுக்குமாறு கூறுகின்றேன்.” காரணம் இங்கு தமிழன் அடக்கப்படுகின்றார். ஊழல் நிறைந்துள்ளது.
தான் அப்பாவி சிங்கள மக்களை எதிர்ப்பவன் அல்ல என்றும், சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதையே விரும்புவதாகவும் தெரிவித்த அவர், 2009 மே 18 இல் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அடக்குமுறை அரசை மட்டுமே தான் எதிர்ப்பதாகக் கூறினார்.
தமிழ் மற்றும் சிங்களப் பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் வேற்றுமைகள் இல்லாத போதும், சுயநல அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியலால் தான் சாதாரண மக்கள் வீதிகளில் அடிபடும் நிலை உருவாகிறது.
தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துவதாகச் சாடிய அவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால்தான் தமிழீழம் இன்னும் சிதைந்து கொண்டிருக்கிறது என்றும், முதுகெலும்பும் நேர்மையும் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றிப் பேச முன்வர வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நோக்கிப் பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த அர்ச்சுனா, தமிழ் மக்களின் வலிகளையும் தியாகங்களையும் திரள் நிதி (Fundraising) சேகரிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.





