யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று (15) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
அதன் பின்னர், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளார்.
நிலைமை மோசமடையவே, அதிகாலை 4:30 மணியளவில் சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமிக்கு குடல்வளரி (Appendicitis) பாதிப்பு ஏற்பட்டதால் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் வாந்தி எடுத்த வேளையில், வாந்திப் பொருட்கள் எதிர்பாராத விதமாக சுவாசக் குழாயினுள் சென்றதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.





