விசா இன்றி திருமலையில் கைதான மூவருக்கு அபராதம்!
திருகோணமலையில் விசா இன்றி கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கும், தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் குறித்த சந்தேக நபர்கள் நேற்று (18) முற்படுத்தப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கி இருந்தபோது கடந்த 15 ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது திருமண நிகழ்வொன்றிற்கு வருகை தந்தனர் என வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் தண்டப் பணமாக செலுத்துமாறும், அப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்குமாறும் மேலதிகமாக ஒரு வருட கடூழிய சிறை தண்டனை ஐந்து வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட மூவரையும் மிரிஹான தடுப்பு காவலுக்கு அனுப்பி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை பிரதான நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் கட்டளையிட்டார்.




