இலங்கை செய்தி

தமிழர்களுக்கான தீர்வை வழங்கும் கடமை, பொறுப்பு சம்பந்தனை சாரும் – ஜெயசேகரன்

தேவையற்ற விமர்சனங்களுக்கு அப்பால், தற்போதுள்ள
தலைவர்களுள் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த தலைவர் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் தங்களுக்கு உள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கவனெத்திலெடுத்து செயற்பட வேண்டும் என தெரிவித்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன், தமிழ் மக்கள் என்றும் தங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு இ.ஜெயசேகரன் எழுதிய கடிதத்தில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் ,தமிழ் மக்களின் மூத்த தலைவராகிய தங்களுக்கு உரிமையோடும் பணிவோடும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகின்றது.

தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர் தம் பெரும்பான்மையை இழந்துள்ளனர்.

வடக்கு விரைவாகப்பறிபோய்க்கொண்டிருக்கின்றது.தமிழர்களுடைய பூர்வீகமும் வரலாறும் பாடப்புத்த ரீதியாகவும், தொல்பொருள் ரீதியிலும் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றது.

அரச தலைவர்கள் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மறுபுறம் வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள், வனவளத்திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்திசபை போன்றவற்றினூடாக தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்களை சூறையாடுவதும் கோயில்களை அழித்து புத்த பெருமானை பிரதிஸ்டை செய்வதும், தமிழ் மக்களுக்கான வேலைவாய்ப்புக்களை புறக்கணிப்பதும் தொடர்ந்தும் அன்றாட நிகழ்வாக
நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

இப்படியாக தமிழ் மக்கள் பல முனைகளில் தாக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியா உட்பட ஜனநாயக நாடுகளென தம்மை அடையாளப்படுத்தும் நாடுகள் தமிழர்களையும், தமிழர் தாயகத்தையும், அவர்களுடைய மனித உரிமைகளையும் பாதுகாக்கவும் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை, இன்னும் சிறிது காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தங்கள் தாயகத்தை விரைவாக இழந்துவிடுவார்கள். இவை எல்லாம் தாங்கள் அறியாத விடயம் அல்ல.

உடல் ரீதியாக நீங்கள் பலவீனப்பட்டிருந்தாலும், சிந்தனை மற்றும் அறிவுபூர்வமான செயற்பாடுகளில் நீங்கள் இன்னும் ஆற்றல் நிறைந்தவராகவே இருக்கின்றீர்கள் என நாம் நம்புகின்றோம்.

அந்தவகையிலே இந்திய அமெரிக்கா உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழர் தரப்பு பிரச்சனைகள் தொடர்பாக தங்களைச் சந்தித்து கலந்துரையாடுகின்றார்கள்.

தற்போது தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது அவற்றை தங்கள் கருத்திற் கொள்ளாது தமிழ் மக்களின் விடிவிற்காக, அவர்களுடைய நீண்ட கால உரிமைப்போராட்டத்திற்கு தீர்வினைப்பெற நீங்கள் விரைந்து செயற்பட வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

மறைந்த எமது தலைவர்களான தந்தை செல்வா, தலைவர் அமிர்தலிங்கம், தலைவர் சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் தாங்கள் இணைந்து செயற்பட்டவர் என்ற முறையிலும், பல உலக ராஜதந்திரிகளுடன்
எமது பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்தவர் என்ற ரீதியிலும், இன்று இருக்கக்கூடிய முதிர்ந்த அனுபவமிக்க தமிழ் இனத்தின் பிரச்சினைகளை முற்று முழுதாக அறிந்தவர் என்ற ரீதியிலும், தற்போதைய தமிழ்த் தலைவர்களுக்குள் தங்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்து தமிழ் மக்களை வழி நடத்துவதற்கு தமிழ்த்தரப்பால் ஜனநாயகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அங்கீகாரமும்,ஆணையும் தங்களுக்கு வழங்கப்பட்டது.

அந்தப் பொறுப்பினைத் தங்கள் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரமுள்ள பூரண சுயஆட்சியைப்பெற தாங்கள் இந்தியா உட்பட உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் எல்லாவற்றுடனும் கலந்துரையாடி தமிழர்களுடைய தீர்வினை விரைவுபடுத்த வேண்டுமென தங்களை விநயமாகவும்,தயவுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவே தங்களால் தமிழ் மக்களுக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த பணியாக அமையுமென நாம் கருதுகிறோம். ஆகவே தேவையற்ற விமர்சனங்களுக்கு அப்பால், தற்போதுள்ள தலைவர்களுள் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த தலைவர் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் தங்களுக்கு உள்ளது என்பதை தங்கள் கவனெத்திலெடுத்து செயற்படுவீர்களென
எதிர்பார்க்கிறோம். தமிழ் மக்கள் என்றும் தங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதை தெரியப்படுத்துகின்றேன் என்றார்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content