அனிதா ராதாகிருஷ்ணன் கைது:கொந்தளிக்கும் திமுக உறுப்பினர்கள்
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூராக பேசியமைக்காக திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் திகதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார்.
இது குறித்து தவெக நிர்வாகிகள் ஆத்தூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்தை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு.
அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும்தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் முதல்-அமைச்சர் விஜய் பொலிஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டமைக்கு திமுக கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





