திருகோணமலையில் காணி உரிமைக்கான மாவட்ட செயலணி ஆரம்பம்!
திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு காரணிகளால் காணிகளை இழந்த மக்கள் ஒன்றிணைந்து “காணி உரிமைக்கான திருகோணமலை மாவட்ட செயலணி – TiDALR” எனும் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளனர்.
இச்செயலணியின் தலைவராக திரு. ஏ.ஏ. சிபுனிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக திருமதி. எஸ். ஸஹீலா மற்றும் உபதலைவராக திரு. நா. சண்முகம் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
Human Elevation Organization நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான K. Nihal Ahamed அவர்களின் தலைமையில், திருகோணமலை சர்வோதய கூட்டமண்டபத்தில் மே மாதம் 22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற செயலமர்வில் காணிகளை இழந்த மக்களுடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில், திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டன.
மேலும், சட்டத்தரணிகளான S.H.M. Manaarudeen மற்றும் J. Rasi Muhammed ஆகியோர் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.
திருகோணமலை மாவட்ட இணைப்பாக்க செயற்பாடுகளை சமூக செயற்பாட்டாளர் திரு. M.P.M முஸ்தபா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
புல்மோட்டை, பொன்மலைக்குடா, அரிசிமலை, தென்னமரவாடி, திரியாய், மொறவெவ, மிரிஸ்வெவ, குச்சவெளி, குச்சவெளியான் குளம், முத்துநகர், தம்பலகாமம் மற்றும் கிண்ணியா உப்பாறு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள காணி இழப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மூவின மக்களும் இணைந்து வாழ்ந்து, விவசாயம் மற்றும் பல்வேறு வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பாரம்பரிய காணிகள் கடந்த கால அரச நடவடிக்கைகளின் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மக்களின் காணிகள் துறைமுக அதிகாரசபை, பல்தேசிய நிறுவனங்கள், வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், புனித பூமி பிரகடனம் மற்றும் பாதுகாப்புப் படை முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டுவரும் காணிகளுக்கு முறையான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை மற்றும் இவ்வாறான பிரச்சினைகள் சிறுபான்மையின மக்களை அதிகமாக பாதித்து வருவது மாவட்டம் முழுவதும் நீடித்துவரும் முக்கிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அனைத்து காணிப் பிரச்சினைகளுக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் சட்டரீதியான மற்றும் நிலையான தீர்வுகளைப் பெற நடவடிக்கைகளை முன்னெடுக்க “காணி உரிமைக்கான திருகோணமலை மாவட்ட செயலணி – TiDALR” தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




