நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் : கலவரம் தொடர்பில் வெளியான தகவல்கள்
சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தின் போது, கைதிகள் சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரிக்கு, கைதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , அவரது பாதுகாப்பை உறுதி செய்ய சிறைத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அந்த அதிகாரி அவசரகால சூழ்நிலையின்போது பணிக்கு திரும்பியுள்ளதாகவும் சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கலவரத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் “கட்டுவெல்லகம சுரேஷ்” என அடையாளம் காணப்பட்ட கைதி, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா சிறையில் மற்றொரு குழுவினரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சுரேஷ், மேலும் 13 கைதிகளின் உதவியுடன் நீர்கொழும்பு சிறைக் கலவரத்தை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் “ராக்கி” என்று அறியப்படும் ஒரு கைதியும் அடங்குவார். இவர், சிறைக்குள் தலைமறைவாவதற்கு முன்பு, சுரேஷுடன் சேர்ந்து கலவரத்தைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
கலவரத்தைத் தொடர்ந்து, ராக்கி மற்ற கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்களை விநியோகிப்பதில் சிறை அதிகாரிகளுக்கு உதவியதன் மூலம், தனக்குக் கலவரத்தில் சம்பந்தமில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, சந்தேகத்தைத் தவிர்க்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, நீர்கொழும்பு சிறையின் காவலில் இருந்த 22 ரிப்பீட்டர் வகை துப்பாக்கிகள் மற்றும் 10 டி-58 ரகத் துப்பாக்கிகளை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




