கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு
உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் Gevorg Sargsyan உட்பட தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக, இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராய்ந்த விடயங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் விவசாயம், துறைமுகங்கள், விநியோக சேவைகள் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்தும், இயற்கை அழகை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையை பிரபல்யப்படுத்துவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கும் வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி முகாமைத்துவப் பிரிவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி Stephan mussing, உலக வங்கி தூதுக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அசேல திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




