கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா? அதிமுகவில் இருந்து விலகினார் செம்மலை!
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவில் இருந்து வெளியேறியுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அவர் விரிவான கடிதமொன்றை எழுதியுள்ளார்.
” தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது.
இதே மனநிலையில்தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.” என மேற்படி கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளன. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்துக்கு இந்த கதியா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.
‘உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது’ என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.’ எனவும் செம்மலை குறிப்பிட்டுள்ளார்.




