பிரெக்ஸிட் திட்டத்தினால் ஆண்டுக்கு 30 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு!
பிரெக்ஸிட் திட்டத்தினால் ஆண்டுக்கு 30 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு ஏற்படுவதாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் (David Miliband) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் வருமான இழப்பு, ஐக்கிய இராச்சியம் மீது “தினமும் ஒரு கடுமையான வரியை” விதிப்பதற்குச் சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அவர் பிரெக்ஸிட் வரி என்று விவரித்துள்ளார்.
‘தி பிரெக்ஸிட் எஃபெக்ட்’ (The Brexit Effect) என்ற புத்தக்கத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார விளைவுகளைத் தணிப்பதற்காக, தொழிலாளர் கட்சி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரெக்ஸிட் இல்லாமல் இருந்திருந்தால் இருந்ததை விட வணிக முதலீடு 12-18 சதவீதம் குறைவாக உள்ளது என்றும், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனிலும் 3-4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வுகளையும் மிலிபான்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குடியேற்றச் சவால்களைத் தீர்க்கவில்லை என்றும், அதிகரித்து வரும் உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளுடனான ஐக்கிய இராச்சியத்தின் உறவின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.




