ஓமானுக்கு வடகிழக்கே பயணித்த கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்!
ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (28 கி.மீ) தொலைவில் பயணித்த கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.
UKMTO வெளியிட்ட அறிவிப்பில், ஐ.ஆர்.ஜி.சி-யின் (IRGC) துப்பாக்கிப் படகு ஒன்று கொள்கலன் கப்பலை நெருங்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், “கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கப்பலில் பயணித்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





