வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசைகாட்டி கோடிகளை சுருட்டிய ஆசாமி கைது!
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகச் சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி, பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர், கிண்ணியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், தற்போது குச்சவெளி பிரதேசத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருபவர் என்றும், நீண்ட காலமாக கொழும்பில் தங்கியிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனச் சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல இலட்சம் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரையிலான தொகைகளை இவர் பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வேலைவாய்ப்பு வழங்கப்படாமை மற்றும் பணம் மீள வழங்கப்படாமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காகக் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




