வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
“இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியைச் சந்திப்பதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பின் போது, தனது நீண்டகால அரசியல் அனுபவங்களை அவர் என்னுடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
நாட்டின் அரசியல் துறையில் அவர் ஏற்படுத்திய சிறந்த முன்னுதாரணங்களையும், நாட்டுக்காக ஆற்றிய பாரிய பங்களிப்புகளையும் நான் இதன்போது வெகுவாகப் பாராட்டியதுடன், அவருக்கு எனது நன்றியறிதலையும் மதிப்பையும் தெரிவித்துக்கொண்டேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.





