வழக்கு பதிவு ஏட்டை திருடியவருக்கு மறியல்: உடந்தையாக இருந்த பெண்ணுக்கு பயணத் தடை!
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு , திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி , வழக்கு ஏட்டினை மாவட்ட நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் , பதிவாளர் உடன் காணப்பட்ட முரண்பாடு காரணமாக அவரை பழிவாங்கும் நோக்கில் குறித்த வழக்கு பதிவு ஏட்டினை திருடியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபருக்கு உடந்தையாக இருந்த தட்டெழுத்தாளரான 30 வயதுடைய பெண்ணை 5 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறும், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



