” புலிகள் குறித்து துல்லியமான உளவு தகவல் வழங்கியவரே சுரேஷ் சலே” – கூட்டு எதிரணி புகழாரம்!
“புலிகள் அமைப்பினர் குறித்து துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கிய அதிகாரியே சுரேஷ் சலே. எனவே, அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்நாட்டின் தேசப்பற்றாளர்கள் வீதிக்கு இறங்குவார்கள். ” –
இவ்வாறு கூட்டு எதிரணி உறுப்பினரும், கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருமான் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ சுரேஷ் சலேவுக்கு சுகாதார உணவு வழங்கப்படவில்லை. சோறும், ஒரு கறியுமே வழங்கப்படுகின்றது. மலசலக்கூடம் செல்லமுடியவில்லை. எவரேனும் அவரை சந்திக்க வந்தால் அதிகாரிகள் சூழ்ந்துக்கொள்கின்றனர். CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தால் அவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் அதற்குரிய பொறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்க வேண்டும்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மற்றும் சர்வதேச விசாரணைகளில் சுரேஷ் சலேவின் பெயர் இல்லை. எனினும், அரசியல் பழிவாங்களுக்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தால் சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் வீதிக்கு இறங்குவார்கள்.
அப்போது ஆட்சியாளர்களுக்கு ஒளிவதற்குகூட இடத்தை தேட முடியாமல்போகும்.
எனவே, சுரேஷ் சலேவை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். சுகாதார உணவை வழங்கவும். குடும்ப உறுப்பினரை சந்திக்க வாய்ப்பு வழங்கவும்.
அவர் இந்நாட்டை காத்த ராணுவ வீரர். பிரபாகரன், கேபி உட்பட புலி உறுப்பினர்கள் இருக்கும் இடங்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்கியவர். எனவே, ராணுவத்தினரை இவ்வாறு நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – என்றார்.
அதேவேளை, சுரேஷ் சலே நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.





