சுரேஷ் சலேவுக்காக கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (09) சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் வாதிகளும், தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
சுரேஷ் சாலே நாட்டுக்காக சேவையாற்றியவர், புலி டயஸ்போராக்களின் தேவைக்காக அவர் பழிவாங்கப்படுகின்றார் என இதன்போது உரையாற்றிய விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

தடுப்பு காவலில் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுவருகின்றார் எனவும், அவருக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனவும் சத்தியாக்கிரக போராட்ட இடத்துக்கு வந்திருந்த அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.
நீதி கிடைக்கும்வரை குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என விமல் வீரவனச குறிப்பிட்டார்.
விசாரணைகளை தாம் எதிர்க்கவில்லை, ஆனால் அது முறையாக நடக்க வேண்டும் என உதய கம்மன்பில குறிப்பிட்டார்.





