சங்க நீதிமன்றம் வேண்டும்: ஞானசார தேரர் வலியுறுத்து!
பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சங்க நீதிமன்றம் போன்ற பொறிமுறை இன்றியமையாததாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பௌத்தம் என்பது மிகவும் சுதந்திரமான, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு தத்துவமாகும். தனது குருவைக்கூட விமர்சிப்பதற்கு சுதந்திரம் வழங்கிய மதமாகும்.
இத்தகைய தாராளத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு சிலர் பௌத்தத்தையும் பிக்குகளையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பிழைகள் செய்பவர்கள் சமூகத்தில் மிகச் சிலரே. மனிதர்கள் இருக்கும் இடத்தில் பிழைகள் நடப்பது இயல்பு. அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைகூறுவது ஏற்புடையதல்ல.
மேலும், நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ‘சங்க நீதிமன்றம்’ அமைப்பது தொடர்பான விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன்.” எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.




