லெபனானில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் : இஸ்ரேலுக்கு எதிராக ஜனாதிபதி கண்டனம்
லெபனானில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் தொடர்ச்சியாகக் குறிவைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற கொலைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு, நேற்று இஸ்ரேலிய தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ளது. அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில், இன்று காலை பெய்ரூட்டில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் பத்திரிகையாளர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அவர் பணியாற்றிய “அல் அக்பர்” நாளிதழின் முதல் பக்கத்தில், கையில் ஒலிவாங்கியுடன் புன்னகைக்கும் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
முந்தைய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு தெற்கு லெபனானில் தஞ்சமடைந்திருந்த போது, அமல் கலீல் இஸ்ரேலால் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மீட்புக் குழுவினர் அவரை அடைய இஸ்ரேலிய இராணுவம் தடையாக இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. எனினும், சம்பவம் குறித்து மறுஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய போர்நிலை காலத்தில் லெபனானில் குறைந்தது ஏழு பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு முன் காசாவிலும் டஜன் கணக்கான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.





