ஹெப்ரோனில் இப்ராஹிமி மசூதி மூடல் – இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரில் அமைந்துள்ள இப்ராஹிமி மசூதியை இஸ்ரேலியப் படைகள் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மசூதியில் தொழுகை செய்தவர்களையும், காவலர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய வீரர்கள் உத்தரவிட்டதாக மசூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மற்றும் நுழைவாயில்களும் மூடப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து பலஸ்தீனத்தின் வக்ஃப் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மசூதியின் தற்போதைய நிலையை மாற்ற முயலும் இஸ்ரேலின் தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை அவர்கள் விவரித்துள்ளனர். மேலும், இது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறும் கடுமையான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெப்ரோனின் பழைய நகரில் வாழும் பலஸ்தீனியர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகள், சோதனைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவர்களை அப்பகுதியை விட்டு வெளியேறச் செய்வதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





